உடலில் உள்ள சக்கரங்கள்.
மனித உடலின் உயிராற்றல் சக்தியானது முதுகெலும்பின் அடிப் பகுதியிலிருந்து தலை வரை ஒரு நாடி வழியாகச் செல்கிறது. அந்த நாடியின் பெயர் சுசும்னா நாடி.
இந்த நாடி தான் உயிராற்றலையும் உணர்ச்சிகளையும் ஒன்றிணைத்து மனிதனின் உணர்வு நிலையைப் பராமரிக்கிறது. உடல், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள் ஆகிய நான்கையும் ஒன்றிணைத்து ஒத்திசைவோடு இயங்கச் செய்கிறது.
இன்றைய பாணியில் சொல்வதானால், உடலில் உள்ள ஏழு மாநிலங்களை ஒரு நெடுஞ்சாலை இணைக்கிறது. அந்தச் சாலையின் பெயர் தான் சுசும்னா நாடி. அந்தச் சாலையில் ஆங்காங்கே அமைந்திருக்கும் மாநிலத் தலை நகரங்கள் தான் சக்கரங்கள்.
முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் தொடங்கி, உச்சந்தலை வரையிலும் மனித உடலில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன.
சக்கரங்கள் என்பவை உடலின் சக்தி மையங்கள்.
இவை பல்வேறு வேதிகளை உற்பத்தி செய்கின்றன.
அந்த வேதிகள் தான் உடல் நலம், மனநலம், அறிவு ஆகியவற்றின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் காரணிகள்.
மூலாதார சக்கரம்
இது மனித உடலின் முதலாவது சக்கரம்.
முதுகுத் தண்டின் அடிப்பாகத்தில் சுசும்னா நாடியின் அடிமட்டத்தில் இது அமைந்துள்ளது.
அதாவது ஆசன வாய்க்கும், பாலுறுப்பிற்கும் மத்தியில் முதுகெலும்பின் அடிப்பகுதியில் இது அமைந்துள்ளது.
அட்ரினல் சுரப்பி இந்த சக்கரத்தால் இயக்கப் படுகிறது.
அட்ரீனல் சுரப்பியில் சுரக்கும் வேதிகள் தான் மனிதனுக்கு பாதுகாப்பு உணர்வையும், மனதில் சாந்த நிலையையும், மன ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உருவாக்கக் கூடியவை.
இந்த சக்கரம் சமநிலையில் இருக்கும் போது எப்படிப்பட்ட புதிய சூழலையும் எளிதாக எதிர்கொள்ளும் திறனை மனிதன் பெறுகிறான்.
மனிதனின் மனத் துணிச்சல் பெருகும்.
மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன் வளரும்.
இந்த சக்கரம் தன் சமநிலையை இழக்கும் போது, மனிதனுக்கு சித்தப் பிரமை பிடித்த மாதிரி இருக்கும்.
வாழ்க்கை தன் கட்டுப் பாட்டிலிருந்து விலகி விட்டதைப் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
மாற்றங்களை எதிர்கொள்ள மனம் அச்சப்படும்.
உடற்பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு மற்றும் களைப்பு போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த சக்கரத்தின் நிறம் கருப்பு. மந்திரச் சொல்-லாரரம்.
ஸ்வாதிஸ்தான சக்கரம்
இது உடலின் இரண்டாவது சக்கரம்
இது குனாஸ் என்கிற பாலியல் சுரப்பியை இயக்குகிறது.
இது தொப்புளுக்குக் கீழே இரண்டு அங்குல தூரத்தில் அமைந்திருக்கிறது.
இதைப் புனித சக்கரம் என்றும் அழைக்கிறார்கள்.
சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய், பிராஸ்டேட் சுரப்பி, ஆண் பாலுறுப்பு விதைகள் மற்றும் சினைப்பை, கருப்பை, சிறுநீரகங்கள் உட்பட பெண்ணின் பால் மண்டலம் போன்றவை இந்த சக்கரத்தின் மேற்பார்வையில் இயங்கக் கூடிய உடல் உறுப்புக்களாகும்.
இந்த சக்கரம் சமநிலையில் இருக்கும் போது மனிதர்களின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும்.
ஆக்க பூர்வ சிந்தனை பிறக்கும்.
கற்பனை வளம் சிறப்பாக இருக்கும்.
வெற்றியும் பணமும் எளிதாக வந்து கொண்டிருக்கும்.
பெருந்தன்மையான அணுகுமுறை என்பது இயல்பான செயலாகவே இருக்கும்.
பாலுறுப்பு வீரியமுடையதாகத் திகழும்.
பெண்ணுக்குரிய உச்சகட்ட இன்பம் நிகழ்வதற்கான நேரம் சற்றுக் குறையும்.
கற்பனை, படைப்பாற்றல் சிந்தனை, இரக்கம், ஈகை போன்ற மனிதப் பண்புகளை உருவாக்கும் வேதிகளின் பிறப்பிடம் இது.
அதனால் தான் பஞ்சமின்றிப் பாலின்பத்தை அனுபவிப்பவன் பேரரசனாக, பெருந் தலைவனாக, மாபெரும் படைப்பாளியாக, பேரறிஞனாக, அழியாக் கவிஞனாக உருவாகிறான்.
பாலின்ப வேட்கையைத் தீர்த்துக் கொள்ள முடியாதவன் மிருக சிந்தனையோடு நடமாடுகிறான்.
இதன் சமநிலை தவறும் போது, கவலைகள் பிறக்கும். சிந்தனைத் திறன் சீர்கெடும். தோல்விகள் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். துரித ஸ்கலிதம் நிகழும். மேலே சொல்லப்பட்ட உடல் உறுப்புக்களோடு தொடர்புடைய வியாதிகள் வரலாம். பெண்ணின் பிடாரித்தனம் துவக்கமாகும்.
இதன் நிறம் நீலம். இதற்கான மந்திரச் சொல்-வம்.
மணிப்பூர சக்கரம்
உடலின் மூன்றாவது சக்கரம் இது.
கணையம் என்கிற சுரப்பியை இது இயக்குகிறது.
வயிற்றுப் பகுதிக்கு மேலே ஒரு அங்குல தூரத்தில் விலா எலும்பின் கீழே இது அமைந்திருக்கிறது.
வயிறு, கல்லீரல், மண்ணீரல், பித்தநீர்ப்பை, தசைநார் மண்டலம் மற்றும் தோல் ஆகிய உறுப்புக்களை இது பராமரிக்கக் கூடியது.
இந்த சக்கரம் சமநிலையில் இயங்கும் போது, கோபம், வருத்தம், கவலை, மகிழ்ச்சி, ஆனந்தம், உற்சாகம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் கட்டுப் பாட்டில் இருக்கும்.
முடிவுகள் எடுப்பதில் வல்லமையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் புத்திசாலித்தனமும் வெளிப்படும்.
பிறரைக் கவரக்கூடிய திறனும் பெருகும்.
பேச்சிலும், செயல்களிலும் பொறுமை இருக்கும்.
இந்தச் சக்கரம் சமநிலையை இழக்கும் போது, தன்னுடைய உடலைப் பற்றி நல்ல கருத்து இருக்காது.
திடீர் திடீரென சம்பந்தமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படும்.
உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப் படுதலும் போராட்டமும் இருந்து கொண்டேயிருக்கும்.
மிதமிஞ்சிய அளவில் கோபமும் கவலையும் ஏற்படும்.
சோர்வும், ஊக்கமின்மையும் எப்போதும் இருக்கும்.
எப்போதும் பிறரைப் பற்றிய கருத்துக்களால் மனம் நிரம்பி வழியும்.
இதன் நிறம் பச்சை. இதற்குரிய மந்திரச் சொல்-- பம்.
அனகாத சக்கரம்
இது உடலின் நான்காவது சக்கரம்
இது மார்பின் மத்தியில் அமைந்திருக்கிறது.
தைமஸ் சுரப்பியை இது நிர்வகிக்கிறது.
இதை இதய சக்கரம் என்றும், மத்திம சக்கரம் என்றும் அழைப்பர்.
இதயம், மார்புகள், நுரையீரல், இரத்த ஓட்டம் ஆகியவற்றை இந்த சக்கரம் தான் பராமரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சக்கரம் சமநிலையில் இயங்கும் போது, மனிதனின் மனம் அன்பால் நிறைந்திருக்கும்.
பிறருடைய குற்றங்கள் மன்னிக்கப்படும்.
சமூகத்துடனும், குடும்பத்துடனும் உள்ள நெருக்கம் மிக ஆழமானதாக இருக்கும்.
வாழ்க்கை குதூகலமானதாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
இந்த சக்கரம் தான் நோயெதிர்ப்பு சக்தியை நிர்வகிக்கக் கூடியது.
இந்தச் சக்கரம் சமநிலையை இழக்கும் போது, உறவுகள் சீர்கெடும்.
நட்பு பாழாகும்.
காதல் முறிந்து போகும்.
பிறருடனான தொடர்புகள் குறையும்.
வாழ்க்கை குறித்த நம்பிக்கை குறையும்.
வருத்தங்களுக்குப் பஞ்சமே இருக்காது.
எல்லோரிடமும் குறைகள் மட்டுமே தெரியும்.
நோய் எதிர்ப்பு சக்தியே இருக்காது.
அடிக்கடி உடல்நலம் கெடும்.
இதன் நிறம் சிவப்பு. இதற்கான மந்திரச் சொல் -- யம்.
விசுத்த சக்கரம்
உடலின் ஐந்தாவது சக்கரம் இது.
இந்த சக்கரம் தொண்டையில் அமைந்துள்ளது.
தொண்டைப் பகுதி மற்றும் அங்கே அமைந்துள்ள தைராய்டு சுரப்பிகளை இது இயக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த சக்கரம் சமநிலையில் இருக்கும் போது, குரல் பிசிரின்றி ஒலிக்கும். சிந்தனை சீர்ப்படும்.
பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும்.
உடலின் எடையைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க உதவும்.
பிறருடன் மேற்கொள்ளும் தொடர்பு சிறப்பாக இருக்கும்.
சிந்தனை வளமாகவும், விரைவில் நிகழ்வதாகவும் இருக்கும்.
எதிலும் குழப்பமே இருக்காது.
தைராய்டு சுரப்பி தான் உடலை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது.
அதனால், உடலின் வளர்சிதை மாற்றம், உடலின் கட்டுமானத்திற்குக் காரணமான உயிர் அணுக்களுக்குள் நிகழ வேண்டிய வேதியியல் மாற்றங் களை உரிய விதத்தில் நிகழ்வித்தல், அதன் வாயிலாக உடலை சக்தியுடன் வைத்திருத்தல் போன்ற செயல்களில் இந்த சக்கரம் பெரும் பங்காற்றுகிறது.
இந்த சக்கரத்தின் சமநிலை தவறும் போது, கருத்துக்களை வெளியீடுவதில் தயக்கம், குழப்பம், கொள்கையில் தெளிவின்மை போன்ற பாதிப்புகளோடு உடற் பருமன் என்கிற வியாதியும் வரும்.
எவ்வித உரையாடலும் அச்சமூட்டுவதாகவே இருக்கும்.
எலும்புகளின் வலு குறையும்.
ஏனெனில் இது தான் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவைப் பராமரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சக்கரத்தின் நிறம் மஞ்சள். இதற்குரிய மந்திரச் சொல்-வம்
ஆக்ஞ சக்கரம்
உடலின் ஆறாவது சக்கரம் இது.
இந்த சக்கரம் தான் நெற்றிக் கண் என்று அழைக்கப்படுகிறது.
இது பிட்யூட்டரி சுரப்பியை பராமரித்துக் கொண்டிருக்கிறது.
உடலில் உள்ள இதர மையங்களையும் இயக்கும் வேதிகளைச் சுரக்கும் சுரப்பி இது.
இந்த சக்கரம் சமநிலையில் செயல்படும் போது நுண்ணறிவு வளரும்.
உள்ளுணர்வு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
உள்ளுணர்வு என்பது தெய்வத்தின் குரல்.
உள்ளுணர்வு ஒவ்வொரு நபருக்கும் உண்டு.
இதன் குரலை மதிக்காமல் செயல்படும் போது தான், மனிதன் படுதோல்வி அடைகிறான்.
ஆகவே இந்தச் சக்கரம் சமநிலையில் இயங்கும்வரை, வழி தவறும் பேச்சுக்கே இடமிருக்காது.
அறிவு, அனுபவம், புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை யெல்லாம் கடந்த ஞான நிலையை உருவாக்கக் கூடியது.
செய்யும் ஒவ்வொரு காரியமும் சிறப்படையும்.
வளம் பெருகும்.
ஆச்சரியங்களின் களமாக வாழ்க்கை இருக்கும்.
தனிச்சிறப்புடைய மனிதராகத் திகழ வைக்கும்.
இளமையைப் பாதுகாக்கும்.
உறக்கம் அற்புதமாக வரும்.
இந்த சக்கரம் சமநிலை தவறும் போது, சிந்தனை எதிர்மறையாகும்.
இளமையிலேயே வயதான தோற்றம் வரும்.
உறக்கம் வராது.
பொறுமை இருக்காது.
செய்ய வேலையிருக்காது. நிற்க நேரமிருக்காது என்பதைப் போல ஓய்வே இருக்காது.
இதன் நிறம் - வெள்ளை. இடற்கான மந்திரச்சொல்-அம்.
சகஸ்ரார சக்கரம்
மனித உடலிலுள்ள ஏழாவது சக்கரம் இது.
இது பினீயல் சுரப்பியை இயக்கிக் கொண்டிருக்கிறது.
இது சக்கரங்களின் கிரீடம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் உத்தரவிடும் தலைவனாக இது செயல்படுகிறது.
மனிதனின் ஆன்மீக சிந்தையின் மூலம் இது.
மூளையும், முதுகெலும்பும், நரம்பு மண்டலங்களும், உணர்வு மையங்களும் இந்த சக்கரத்தால் தான் இயக்கப்படுகின்றன.
இது சம நிலையில் இருக்கும் போது எதையும் உணர்ந்தறியும் திறன் அற்புதமாக இருக்கும்.
கடவுள் தன்மையை உணரும் வாய்ப்புக் கூட கிடைக்கலாம்.
இந்த சக்கரத்தின் சமநிலை தவறும் போது, நிம்மதி இருக்காது.
சுயநல சிந்தனை பெருகும்.
நான் என்கிற அகம்பாவம் வளரும்.
இதன் நிறம் – வெளிப்படை (Transparent). இதற்கான மந்திரச்சொல் -ஓம்
மொத்தமுள்ள ஏழு சக்கரங்களில் நெஞ்சில் அமைந்துள்ள அனகாத சக்கரம் உடலின் மையத்தில் அமைந்துள்ளது.
இது இதயத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கிறது.
இதயத்திற்கு மேலேயுள்ள மூன்று சக்கரங்களும் அறிவோடு தொடர்புடையவை. இதயத்திற்கு கீழே அமைந்துள்ள மூன்று சக்கரங்களும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோபம், வருத்தம், துக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை உருவாக்கக் கூடியவை.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய ஞானிகளால் சொல்லப்பட்ட மேற்கண்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி செய்தது. ஆய்வுக்கூட ஆரய்ச்சிகளின் முடிவில் உரிய காரணத்தைக் கண்டு பிடித்தது.
அதாவது ஒவ்வொரு மையத்திலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அந்த ஒவ்வொரு சுரப்பியும் பல்வேறு இரசாயன திரவங்களைச் சுரக்கிறது. அவற்றின் பெயர் தான் ஹார்மோன்கள்.
இந்த ஹார்மோன்களே மனிதப் பிறவியின் உடல் நலம், மன நலம், அறிவு, உணர்வுகள், உணர்ச்சிகள் போன்ற அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்து வைத்தது.